மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
#tccontest2020யாதும் ஊரே யாவரும் கேளிர்
இப்படி சொல்ல வேண்டும் என்றால் பூங்குன்றனார் உள்ளம் எவ்வளவு பெரியதாய் இருக்க வேண்டும். உலகமே உறவு என்ற கூற்றை நம் மனதில் ஆழ பதித்துக் கொண்டு கட்டுரைக்குள் செல்வோம்.
உறவில்லா உயிர் உலகிலில்லை. இரு உயிர் கொண்ட உறவில் உதிப்பதே ஓர் உயிர் (மகர்ந்த சேர்க்கை விதிவிலக்கு). தாய் தந்தை உறவை தாண்டி, விலங்கில் இருந்து மனிதம் மேன்மை பெற இக்குடும்ப உறவுகள் உரம் இட்டன என்றால் மிகை அல்ல.
வாழ்க்கை சக்கரம் சுழல அனைத்து உறவும் தேவை. அச்சான்னியாய் நான் கருதும் உறவு வாழ்கை துணை.
பெற்றோர் உறவில் இருக்கும் அன்பு,
உடன் பிறப்பில் உள்ள பாசம்,
நட்புறவில் இருக்கும் அன்னோன்னியம்,
மாமன்,அத்தை உறவில் இருக்கும் உரிமை,
தாத்தா பாட்டி உறவில் இருக்கும் கரிசனம்,
என்று எல்லா உறவில் இருக்கும் அம்சங்களும்
மற்றும் இவை எவற்றிலும் இல்லா ஓர் உறவு - வாழ்கை துணையில் மட்டுமே கிடைக்கும்.
என் வாழ்க்கையில் நடந்ததை எடுத்துக்காட்டாய் சொல்ல விரும்புகிறேன்.பதின் வயதில் காதல் கொண்டேன், உறவுக்காரப் பெண் தான் என்றாலும் வேறு மாநிலத்தில் வசித்த அவள் குடும்பத்துக்கும் எங்களுக்கும் அவ்வளவாய் தொடர்பு இருந்ததில்லை. எனவே முதலில் அத்தொடர்பை பலப்படுத்தினோம் (ஜோடி, பூவெல்லாம் உன் வாசம் அளவுக்கு இல்லை என்றாலும்). பல வருட காத்திருப்புக்கு (பெற்றோர் சம்மதத்திற்காக) பின் திருமணம் முடிந்தது. திரை கடல் ஓடி திரவியம் சேர்க்க அயல் நாட்டில் இருந்ததால், பிரிவில் சில வருடங்கள் கழிய நேர்ந்தது. இப்பிரிவுகள் அப்போது வலி தந்தாலும், இப்போது நினைக்கையில் வலியினுடே வலுவும் சேர்த்திருக்கின்றது என்பதே உண்மை.
ஆசை 60 நாள் மோகம் 30 நாள் ஆக மொத்தம் 90 நாட்கள். இன்னாட்களில் துணையின் பலம் பலவீனம் தெரிந்துக் கொள்ள வேண்டும். பலத்தை பெரிதுப் படுத்தி பெரிய ஆளாய் மாற்றா விட்டாலும், பலவீனத்தை குறைக்கா விட்டாலும் பெரிது படுத்தாமல் இருத்தலே நலம். என் பலவீனம் எனக்கு தெரிந்ததை விட என்னவளுக்கு நன்றாக தெரியும். அதை சீண்டாமல் இருக்க காரணம் காதலியே துணைவியாய் அமைந்ததே.
அவள் குறையை நான் குறை கூறுவதில்லை. காரணம் காதலன் என்பது மட்டுமல்ல அவையாவும் அவ்வளவு பெரிய குறை அல்ல என்பதுவுமே. இதை தான் காதல் கண்னை மறைக்கும் என்பார்களோ.
ஒரு உறவில் எல்லா வித உணர்வுகளும்சதவிகிதத்தில் இருக்க வேண்டும். அவள் என் மீது கோவப்படுகின்ற போது ஏனோ நான் அமைதியாய் இருந்து விடுகின்றேன்.
அவளை பிரிந்து நான் சேர்க்கின்ற பணம் பயன் அற்றது என்பதை அறிவதற்கே சில காலம் கழிந்துவிட்டது. இளமையில் அனுபவிக்காத காதல், கலவி, காமம் எல்லாம் கண் கெட்ட பின் செய்யும் சூரிய நமஸ்காரம் தான். அவளை என்னுடன் அழைத்துச் செல்ல முடியாத சூழலில் நான் இந்தியா வந்திட முடிவு செய்தேன். இதில் என் சுயநலம் தான் முழு காரணம், ஆனால் பழி ஏற்றுக் கொண்டது அவள். வேலை கிடைப்பது எளிதாய் இருந்தாலும் அவையாவும் மீண்டும் எங்களை பிரிப்பதாய் அமைய சொந்த தொழில் தொடங்கினேன். பெரிய இலாபம் இல்லாவிட்டாலும் இன்பமாய் கழிந்த நாட்கள் அவை. தொழிலில் பக்க துணையாக அவளிருந்தாள், பக்கத்திலே இருந்தாள். விதி எங்களுக்கு வேறி வழி திறந்து விட்டது. மீண்டும் வெளிநாட்டு வாசம்.
NRIகளுக்கு இருக்கும் நன்மையும் தீய்மையும் - இங்கே 'நமக்கு நாமே' என்றிருப்பது.
பிரசவ அறையில் அவள் கூட நான் இருந்தது அவளுக்கு பெரிய பலத்தை தந்தது. எனக்கு அவள் மேல் பெரிய மரியாதை, பாசம், இனி இவளை கண்ணீர் சிந்தவே விட கூடாது என்ற வைராக்கியம் தந்தது. என் தாய் பட்ட வேதனை நினைவில் வந்தது. அதன் பிறகு பெண்களை பார்க்கும் விதம் மாறியது.
இதை - பட்ட பின் திருந்தும் புத்தி என்றும் சொல்லலாம்.காதலியாய் அவளை கொஞ்சியதை விட
மணைவியாய் அவளை உச்சி முகர்ந்ததை விட
தாய்மையாய் அவளை கொண்டாடியது பேரின்பம்.
பேராண்மை என்னும் சொல், ஆண்களுக்கானது மட்டும் அல்ல அது தாய்மையை குறிக்கும் போது தான் முழுமை அடைகின்றது